நள்ளிரவில் லலித்மோடி சஸ்பெண்ட் : பிசிசிஐ அதிரடி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை பரவவிட்டுள்ளது. இதற்கு காரணமான லலித் மோடியை ஐ.பி.எல். அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கு கிரிக்கெட் வாரியத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். இதனைய தொடர்ந்து மும்பையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தில், லலித்மோடி கலந்து கொள்வதை தடுப்பதற்காக, இறுதி போட்டி முடிந்ததும், நேற்று நள்ளிரவு அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஐ.பி.எல். நிர்வாகம் நடத்தி வரும் 20/20 கிரிக்கெட் போட்டியில் பல ஆயிரம் கோடி பணம் புரள்கிறது. கொச்சி அணி ஏலம் விடப்பட்ட விவகாரத்தில் ஐ.பி.எல். தலைவர் லலித் மோடிக்கும், வெளியுறவு இணையமைச்சர் சசி தரூக்கும் இடையே நடந்த மோதலில் தரூரின் பதவி பறிபோனது. இதைத் தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டிகளில் நடைபெறும் முறைகேடுகள் மீது மத்திய அரசின் கவனம் திரும்பி உள்ளது. மக்களவையில் நேற்று இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் கிளப்பின.ஐ.பி.எல் கொச்சி அணி ஏலத்தில் மத்திய அமைச்சர் சசிதரூர் தலையிட்டதாகவும், அவரது தோழி சுனந்தா புஷ்கருக்கு ரூ.70 கோடி மதிப்பிலான பங்குகளை இலவசமாக பெற்றுத்தந்தார் எனவும் டுவிட்டர் இணையளத்தில் தகவல் வெளியிட்டார் லலித் மோடி. இந்த விவகாரம் பார்லிமென்ட்டில் பூதகரமாக வெடித்தது. இதனால், லலித்மோடியை பதவி விலகுமாறு காங்கிரஸ் மேலிடம் கூறியது. இதையடுத்து வேறு வழியில்லாமல், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சசிதரூர். இதைத் தொடர்ந்து ஐ.பி.எல் கிரிக்கெட்டில் சூதாட்டம் நிலவுகிறது, கருப்பு பணம் விளையாடுகிறது என புகார்கள் வந்தன. இதுபற்றி விசாரணை நடத்தப்படும் என நிதியமைச்சகம் கூறியது. முதலில் லலித்மோடியின் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றியது. பின் நாடு முழுவதும் 8 முக்கிய நகரங்களில் உள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் அணியின் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக, வருமானவரித்துறை அதிகாரிகள் கூறினர். லலித் மோடிக்கு 3 அணியில் பங்கு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சர்ச்சையை ஆரம்பித்த லலித்மோடியே சர்ச்சையில் சிக்கியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர். இன்று நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும், விளக்கம் அளிக்க 5 நாள் அவகாசம் வேண்டும் என கேட்டார் லலித் மோடி. 'ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் நான்தான். எனக்கு தெரியாமல் கூட்டத்தை நடத்துவது சட்டவிரோதம் என்றும், முடிந்தால் என்னை பதவியில் இருந்து நீக்கிப் பாருங்கள்' என்றும் கூறினார். இன்று நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் லலித்மோடி சஸ்பெண்ட் செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் திடீரென, இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பேன் என லலித்மோடி நேற்று மாலை அறிவித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு நேற்று அவர் அனுப்பிய கடிதத்தில், 'ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டம் என் தலைமையில் நடக்கிறது. அப்போது, புகார்களை ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இதற்கு பதிலளிக்க காலஅவகாசம் அளிக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.இது குறித்து கிரிக்கெட் வாரிய தலைவர்கள் சஷாங் மனோகர், நிர்வாகிகள் சீனிவாசன், ரத்னாகர் ஷெட்டி, நிரஞ்சன் ஷா ஆகியோர் நேற்று மாலை ரகசிய ஆலோசனை நடத்தினர். ஐ.பி.எல் சீசன்&3 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி மும்பையில் நேற்று இரவு நடந்தது. போட்டி முடிந்ததும், லலித் மோடிக்கு, பி.சி.சி.ஐ. சஸ்பெண்ட் நோட்டிஸ் அனுப்பியது. இன்று நடைபெறும் ஐ.பி.எல் நிர்வாகக் குழு கூட்டத்தில் லலித்மோடி நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதை தவிர்ப்பதற்காக இந்த அதிரடி உத்தரவு நேற்று நள்ளிரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

0 comments: